தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவரின் தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமி!
டெல்லியில் தன்னை பலாத்காரம் செய்த இளைஞரின் தாயை சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியின் சுபாஷ் மோஹால் பகுதியை சேர்ந்த குர்ஷிதா (50) என்பவர், அதேபகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று அந்த கடைக்கு வடக்கு கோண்டா என்ற பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வந்தார். அப்போது திடீரென அந்த சிறுமி தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் குர்ஷிதாவை நோக்கி சுட்டார்.
அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், துப்பாக்கி சூட்டால் காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, சிறுமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான பெண்ணின் 25 வயது மகன், அந்த 17 வயது சிறுமியை 2021ம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தற்போது அந்த இளைஞர் சிறையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2 ஆண்டுகள் கழித்து அந்த இளைஞரின் தாயாரை சிறுமி துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் கூறினர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ‘தனக்கு நேர்ந்த அவலத்திற்கு பழிவாங்கும் விதத்தில் இளைஞரின் தாயார் மீது சிறுமி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான 50 பெண்ணின் வயிற்றில் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்’ என்றனர்.
…