வேகமாகப் பரவும் பறவைக் காய்ச்சல் 50 ஆயிரம் கோழிகளை அழிக்க நடவடிக்கை!
மேற்கு டென்மார்க்கில் 50,000 கோழிகள் கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கில் கோழிப் பண்ணையொன்றில் பறவைக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பண்ணையில் சுமார் 50,000 கோழிகள் கொல்லப்படவிருப்பதாக டென்மார்க் உணவு, வேளாண், மீன்வள அமைச்சு தெரிவித்தது.
கோழிகளுக்கு H5N1 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அது வேகமாகப் பரவக்கூடியது.
மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும். எனவே அடுத்த சில நாள்களில் 50,000 கோழிகள் கொல்லப்படும் என அமைச்சு கூறியதாக Xinhua செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
அந்தக் கிருமிப்பரவல் புத்தாண்டுக்கு முன்தினம் அடையாளம் காணப்பட்டது. ஓரெம் (Orum) நகரத்துக்கு அருகிலுள்ள பண்ணையில் சில கோழிகள் மாண்டுகிடந்தன. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட கோழிகள் முழுமையாக அகற்றப்பட்டு, பண்ணை முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பண்ணையின் 10 கிலோமீட்டர் சுற்றுப் பகுதியில் அனுமதியின்றி முட்டை அல்லது கோழிகளை உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பதிவான 4ஆவதும் நாட்டின் ஆகப் பெரியதுமான பறவைக் காய்ச்சல் சம்பவம் இது என்று அமைச்சு தெரிவித்தது.