ஜனசக்தி குழுமத்தின் தலைவரை கடத்தி கொலை செய்ய முயற்சி!

ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரை கடத்தி, பொரளை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொரளை பொலிஸார் திடுக்கிடும் தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.

நபரொருவருக்கு பல கோடி ரூபா கடன் தொகையொன்றை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை சந்திப்பதற்காக, கறுவாத்தோட்டம்- ப்ளவர் வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து இன்று பிற்பகல் மனைவியிடம் விடயம் தொடர்பில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சிறிது நேரத்தில் அவரது மனைவி அவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதாகவும், ஆனால் அவரது தொலைபேசி இயங்காமல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவர் பொரளை மயானத்தில் இருப்பது தொடர்பில் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு GPS தொழில்நுட்ப சமிக்ஞைகள் இதன்போது கிடைத்துள்ளது.

இது தொடர்பில் விரைந்து செயற்பட்ட அவரது மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரிடம் கூறி பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் போது குறித்த அதிகாரி அங்கு சென்று தேடிப்பார்த்தபோது தினேஷ் ஷாப்டர் பயணித்த காரின் சாரதியின் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் காருக்குள் இருந்துள்ளார். மேலும், தினேஷ் ஷாப்டரும் அங்கு கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளதாக குறித்த நிறைவேற்று அதிகாரி மனைவிக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், இருவரும் மீட்கப்பட்டுள்ள சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தினேஷ் ஷாப்டரின் உடல்நிலை தொடர்பில் இதுவரையில் மருத்துவமனை அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *