சீனாவில் ஊரடங்கு ஐபோன் உற்பத்தி பாதிப்பு!

சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணம், சென்ஸோ நகரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தான் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்கள் அசம்பல் செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சீனா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமாகியுள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீன அரசு முடுக்கிவிட்டுள்ளது.

சென்ஸோவிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகரிப்பால் ஆப்பிளின் முதன்மை துணை ஒப்பந்ததாரரான ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடந்த மாதம் சென்ஸோவில் உள்ள தொழிற்சாலையின் பெரும் பகுதியை மூடிவிட்டது. ஆலையை விட்டு ஏராளமான தொழிலாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில், சொற்ப ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

இதனால் சென்ஸோ தொழிற்சாலையில் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனம் கூறியிருக்கிறது. இவ்வகை மாடல்களுக்கு உலகம் முழுவதிலும் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதனை முழு அளவில் பூர்த்தி செய்ய முடியாது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆப்பிள் தயாரிப்புகளை பெற அதிக நேரம் காத்திருக்க நேரிடும் என்று ஆப்பிள் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *