இந்திய அணி அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வேயை வீழ்த்திய இந்திய அணி வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61*, கே.எல்.ராகுல் 51 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி, பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் குரூப் 2-ல் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. 2-ம் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. வரும் வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
…