கால்பந்தாட்ட போட்டியில் நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் ரீஜென்சியில் நடைபெற்ற போட்டியில் அரேமா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து அரேமா மற்றும் பெர்செபயா சுரபயாவின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை. உயிரிழந்தவர்களில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக நெரிசல், மிதிப்பு போன்றவற்றால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் என்றும் அவர்கள் பல்வேறு உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரேமா அணியின் தோல்வியை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் களமிறங்கியதையடுத்து மோதல் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தால் இந்தோனேசிய லீக் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
PT Liga Indonesia Baru இன் தலைவர் அக்மத் ஹடியன் லுகிடா, இந்த சம்பவத்தால் தான் கவலையடைவதாகவும் ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.