மாணவிகளின் குளிக்கும் வீடியோவை ஆண் நன்பருக்கு அனுப்பிய மாணவி!
சண்டிக்கரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பதை சக மாணவியே வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பிய விவகாரத்தில் அந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள முன்னணி பல்கலைக்கழகமான சண்டிகர் பல்கலைக்கழகக்தில் பல மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில், அதே விடுதியில் தங்கி படிக்கும் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் சக மாணவிகள் பாத்ரூமில் குளிக்கும் காட்சிகளை பதிவு செய்து அதை தனது ஆண் நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.
நீண்ட நாள்களாக இந்த குற்றச்செயலில் இந்த மாணவி ஈடுபட்டு வந்துள்ள நிலையில், சுமார் 60 மாணவிகளின் வீடியோக்கள் அவரது ஆண் நண்பருக்கு அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோக்களை வாங்கி அவரது ஆண் நண்பர் ஆபாச இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த விவரம் மாணவிகளுக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள், குற்றம் செய்த மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மாணவி மீது 354சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் உணர்ச்சிகரமான விஷயம் என்பதால் கவனத்துடன் கையாள்வதாக மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் தெரிவித்துள்ளார். மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர், இது தொடர்பாக உரிய நீதி வழங்கப்படும் என்றார். ஊடகங்களும் இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயல்பட அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
பஞ்சாப் மாநில பெண்கள் ஆணைய தலைவர் மனிஷா குலாடி இது தொடர்பாக கூறுகையில், இது உணர்ச்சிகரமான விவகாரம் என்பதால், துரிதமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும் குற்றச்செயலில் ஈடுபட்டோர் யாரும் தப்பிக்க முடியாது என பெற்றோருக்கு உறுதி அளிக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக விவகாரம் குறித்து அம்மாநில டிஜிபி கூறும்போது, முதற்கட்ட விசாரணையில் மாணவி ஒருவர் வீடியோ எடுத்தது உறுதியாகியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள், எனவே மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அமைதி காக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த முக்கிய குற்றவாளியான ஆண் நண்பரை கைது செய்ய பஞ்சாப் போலீசார் சிம்லா விரைந்துள்ளனர்.