மின் கட்டணத்தை உயர்த்தினாலும் 45 பில்லியன் ரூபா நட்டமாம்!
புதிய மின் கட்டண முறையின் கீழ் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட விசேட முறைமை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நீக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், மின்சார சபை ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது பணிப்பாளர் சபையே அன்றி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவல்ல என மின்சார சபையின் கூட்டாண்மை மூலோபாயம் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.
சராசரியாக 75% மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினாலும், மின்சார சபைக்கு வருடாந்தம் 45 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புதிய முறைமையில் உள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்துமூலம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.