பா. உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவால் 3 கோடி ரூபா செலவு அதிகரிப்பு!
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவை, தற்போதுள்ள விலையிலேயே வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினால் கடந்த மாதம் அதற்காக செலுத்த வேண்டிய மேலதிகத் தொகை மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகம் என பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருட்களின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வந்தாலும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் தீர்மானத்தின் பேரில், கடந்த ஜனவரி மாதம் நிலவிய விலைக்கேற்ப பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதன்படி ஒரு லீற்றர் எரிபொருளுக்கு எம்.பி.க்கு வழங்கப்படும் தொகை நூற்றி இருபது ரூபாவாகும். ஆனால் புதிய முடிவின்படி, தற்போதுள்ள விலையின்படி லீற்றருக்கு வழங்கப்படும் தொகை நானூற்று ஐம்பது ரூபாவாக இருக்கும். கொழும்பு மாவட்ட எம்.பிகளுக்கு மாதாந்தம் இருநூற்றி எண்பது லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகிறது.
கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட உறுப்பினர்களுக்கு முந்நூற்று ஐம்பது லீற்றரும். கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்ட உறுப்பினர்களுக்கு நானூற்று இருபது லீற்றரும், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்ட உறுப்பினர்களுக்கு நானூற்று தொண்ணூறு லீற்றரும் வழங்கப்படும்.
அத்துடன், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, பதுளை, வவுனியா, திருகோணமலை, அனுராதபுரம், மொனராகலை ஆகிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐந்நூற்று அறுபது லீற்றர் எரிபொருளும், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், திகாமடுல்ல, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறுநூற்று முப்பது லீற்றர் எரிபொருளும் தேசியப் பட்டியல் எம்.பி.க்கு நானூறு லீற்றர் எரிபொரும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.