ஜனாதிபதியும்,பிரதமரும் இராஜினாமா செய்யும் வரை வெளியேறப்போவதில்லை

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகல் கடிதத்தினை ஒப்படைக்கும் வரை மக்கள் ஆக்கிரமித்துள்ள எந்தவொரு கட்டடத்திலிருந்தும் வெளியேறப் போவதில்லை. அதே போன்று மக்களை ஏமாற்றும் சர்வகட்சி அரசாங்கத்தையும் நாம் ஏற்கப் போவதில்லை என்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வசந்த முதலிகே இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அவரவர் பதவிகளிலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பதவி விலகுவதற்கு கால அவகாசம் கோரியுள்ளனர். மக்களின் எதிர்ப்பினையும் மீறி ஏதேனுமொரு வகையில் பதவியில் நீடிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ முற்படுவாராயின் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகல் கடிதத்தினை ஒப்படைக்கும் வரை மக்கள் ஆக்கிரமித்துள்ள எந்தவொரு கட்டத்திலிருந்தும் வெளியேறப்போவதில்லை. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ரணில் விக்கிரமசிங்க 5 நாட்களேனும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு முயற்சித்தால் அதற்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை.

அதே போன்று மக்களை ஏமாற்றும் சர்வகட்சி அரசாங்கத்தையும் நாம் ஏற்கப் போவதில்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தீர்வு திட்டங்களை நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். அதன்படி செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *