பல் தேய்க்காமல் முத்தம்;மனைவியை குத்தி கொன்ற கணவன்!
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு, தீபிகா என்ற மனைவியும் இரண்டரை வயதில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணிபுரியும் அவினாஷ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க பாலக்காட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவினாஷ் தூங்கி எழுந்ததும் தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்த மனைவி தீபிகா, பற்களை தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க வேண்டாம் என கண்டித்து உள்ளார்.
இதற்கு, அவினாஷ் எதிர்ப்புத் தெரிவிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவினாஷ், மனைவி தீபிகாவை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபிகாவை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் குறித்து, பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் அவினாஷை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.