இலங்கையில் பரவி வரும் காய்ச்சலால் 14 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் பரவி வரும் காய்ச்சலினால் 14 பேர் உயிரிழந்துள்ளமை சுகாதார நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பருவகால காய்ச்சல் வேகமாக பரவிவருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 100க்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கஹதுடுவ மற்றும் கலவான பகுதிகளில் இருந்தும் சில கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மாதிரிகள் வந்ததாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகர எல்லைகள், தெஹிவளை, பிலியந்தலை மற்றும் ஹோமாகம ஆகிய இடங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகும்.
மேலும், பேருவளை மற்றும் களுத்துறை ஆகியவை அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலும் பரவும் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸால் பருவகால காய்ச்சல் ஏற்படுவதாக ஆலோசகர் மருத்துவர் ஜூட் ஜெயமஹா தெரிவித்தார்.
அதிக காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் / அடைப்பு, தொண்டை புண், தலைவலி, தசை வலி, சொறி மற்றும் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.