அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை சாதனை வெற்றியை பதிவு செய்தது!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 292 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பான ஹெட் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும், அணித்தலைவர் பிஞ்ச் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வெண்டர்சே 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அதிகூடிய ஓட்டங்களை துரத்தி வெற்றி பெற்ற சாதனைப் படைத்தது.ஆட்ட நாயகன் விருதை பெத்தும் நிசங்க பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸங்க 137 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

அதன்படி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *