கர்ப்பமாக இருந்த போதே மீண்டும் கர்ப்பமான பெண்!
அதிசயமான நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. சிலவற்றை நம்மால் ஒருபோதும் நம்ப முடியாது. அப்படியான ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடைபெற்றிருக்கிறது.
டெக்ஸாசைச் சேர்ந்த காரா வின்ஹோல்ட் எனும் 30 பெண் கருவுற்றிருக்கும் போதே மீண்டும் கருவுற்ற நிகழ்வு வியக்கவைக்கிறது. ஏற்கெனவே மூன்று முறை கருவுற்று எதுவும் தங்காத சூழலில் இந்த அரிதான நிகழ்வின் மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டு முறை கருவுற்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அவர்.
சரி இது எப்படிச் சாத்தியமாகும்? என்ற கேள்வி எழுவது இயல்பு தான். ஆகும் என்கிறது அறிவியல். இதற்கு சூப்பர்ஃபெகேஷன் என்று பெயராம்.
ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அடுத்த கரு உருவாகும் நிகழ்வு சூப்பர்ஃபெகேஷன் (Superfecation) எனப்படுகிறது. ஒரு குழந்தை உருவான சில நாட்களில் அல்லது ஓரிரு வாரத்தில் அடுத்த கரு உருவாகுமாம்.
இறுதியாக வின்ஹோல்டுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் 6 நிமிட இடைவெளியில் பிறந்தனர். இது குறித்து அவர் கூறும் போது, “முதல் நான் மருத்துவரிடம் “என்ன ஆனது? இதற்கு முன் அவன் இல்லையே? என்ன நடக்கிறது?” எனக் கேட்டேன். மருத்துவர் என்னிடம் நான் இரண்டு முறை கருவுற்றிருப்பதாகவும், இரண்டும் வெவ்வேறு தருணங்களில் என்றும் விளக்கினார். நான் உறுதியாகச் சொல்கிறேன் என்னுடைய கர்ப்பத்தில் நடந்த எல்லாமே அதிசயம் தான்.” என்று கூறியிருக்கிறார்.
2018ம் ஆண்டு முதன் முதலாகக் கருவுற்ற வின்ஹோல்ட் கருசிதைந்ததால் மனமுடைந்து போனார். ஆனால் அதன் பிறகு இரண்டு முறை கரு கலைந்திருக்கிறது. இறுதியாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்.