உலகத்தை திரும்பி பார்க்க வைத்த சவுதி அரேபியா!

சவூதி அரேபியா 500 பில்லியன் டொலர் செலவில் உலகின் மிகப்பெரிய கட்டிடத்தை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ள நடவடிக்கையானது உலக மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்கனவே உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபா உள்ளது. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா, முற்றிலும் புதிய வளர்ச்சியின் ஒரு பகுதியாக, நாட்டின் அதிக மக்கள்தொகை இல்லாத பகுதியில், 500 பில்லியன் டொலர் மதிப்பில் NEOM எனப்படும் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களை கட்டியெழுப்பத் திட்டமிட்டுள்ளது.

சவூதியின் பட்டத்து இளவரசரும் நடைமுறை ஆட்சியாளருமான முகமது பின் சல்மானின் சிந்தனையில் உருவான NEOM, சுமார் 500 மீட்டர் (1,640 அடி) உயரமுள்ள இரட்டை வானளாவிய கட்டிடங்களை டஜன் கணக்கான மைல்களுக்கு கிடைமட்டமாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செங்கடல் கடற்கரையிலிருந்து பாலைவனத்திற்கு செல்லும் வரை வானளாவிய கட்டிடங்கள் குடியிருப்பு, சில்லறை விற்பனை மற்றும் அலுவலக இடங்களின் கலவையாக அந்த கட்டிடம் அமையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தும் அதிவேக சுரங்க ரயில் மூலம் இணைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டம் முடிக்கப்பட்டால், ஒவ்வொரு கட்டமைப்பும் உலகின் தற்போதைய மிகப்பெரிய கட்டிடங்களை விட பெரியதாக இருக்கும், அவற்றில் பெரும்பாலானவை குடியிருப்பு சமூகங்களை விட தொழிற்சாலைகள் அல்லது மால்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ல் அறிவிக்கப்பட்ட இளவரசர் முகமதுவின் இந்த NEOM திட்டம் கடந்த ஆண்டு 200 பில்லியன் டொலர் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது உள்கட்டமைப்பு உட்பட திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் 500 பில்லியன் செலவாகும் என தெரியவந்துள்ளது.

இது வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதும், எண்ணெய் விற்பனையை நம்பாமல் சவூதியின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதும் அவரது திட்டங்களின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *