கணவரின் காதலியை வன்கொடுமை செய்ய திட்டம் தீட்டிய மனைவி!
தன் கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணம் மீறிய உறவிலிருந்ததால் அவரது மனைவி ஆத்திரம் தாங்காமல், அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து, ஆள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவமும், பழிவாங்கும் எண்ணமும் ஒரு மனிதனை தன்னிலை மறந்து செயல்படவைக்கும் என்பது தெரிந்ததே. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. தன் கணவருடன் பழக்கம் வைத்திருந்த பெண்ணை, ஆள் வைத்துக் கூட்டுப் பாலியல் செய்து, அதை படமும் பிடித்துள்ளார் ஹைதராபாத்தில் கொண்டபூரைச் சேர்ந்த காயத்ரி.
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக காயத்ரியின் கணவர் தயாராகிக்கொண்டிருக்கும்போது, அதே காலனியை சேர்ந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. காயத்ரிக்குச் சிறிது உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, அந்த பெண் காயத்ரிக்கு உதவியாக அவரது வீட்டிற்கு அழைத்து அங்கேயே தங்கவும் வைத்துள்ளனர். நாளடைவில் காயத்ரியின் கணவருக்கும், அந்த பெண்ணிற்குமான உறவு வலுபட, இருவரின் மீது சந்தேகம் கொண்ட காயத்ரி அந்த பெண் மீது கச்சிபவுலி காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் தெரிவித்தார்.
புகாரளித்த பிறகும், இருவருக்கும் பழக்கம் தொடர ஆத்திரம் அடைந்த காயத்ரி, தன் குடும்பத்தாரையும், அந்த பெண்ணையும் வீட்டிற்கு அழைத்து சமாதானம் பேசி தன் கணவரை விட்டுப் பிரிந்தால் புகாரைத் திரும்ப பெறுவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி வீட்டிற்கு வந்த பெண்ணை தனியே ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, தான் ஏற்கனவே ஏற்பாடு செய்துவைத்திருந்த கும்பலை வைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளார் காயத்ரி.
இதைவிட கொடுமை என்னவென்றால், அதை தன் தொலைப்பேசியில் படம் பிடித்து வெளியில் சொன்னால் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் காயத்ரி மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்