இலங்கைக்கு நிதியுதவி வழங்க திட்டமில்லை உலக வங்கி அறிவிப்பு!

இலங்கை உரிய பேரண்ட பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க திட்டமில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் உலக வங்கி நேற்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கைக்கு கடன் பெறுவதற்கான வழியை அல்லது புதிய கடன் உறுதிப்பாடு போன்ற வடிவங்களில் உலக வங்கி இலங்கைக்கு உதவ திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தவறாகக் கூறியுள்ளன.

இலங்கை மக்கள் மீது நாம் அக்கறை கொண்டுள்ளோம், பொருளாதார ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பரவலான வளர்ச்சியை மீள கட்டியெழுப்புவதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகிறோம். இலங்கை உரிய பேரண்ட பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கிக்கு திட்டமில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு உதவும் வகையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களான சில அத்தியாவசிய மருந்துகளை வழங்குதல், ஏழைகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக பண உதவிகள், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு பாடசாலை மதியஉணவு ஆகியவற்றை வழங்கவும், விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட விடயங்களுக்கான மூலாதாரங்களின் மீள் நோக்கத்தையே நாம்  தற்போது மேற்கொண்டு வருகிறோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *