எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை நித்தியானந்தா தெரிவிப்பு!
சர்ச்சை வீடியோவில் தொடங்கி மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது வரை, சாமியார் நித்தியானந்தாவைச் சுற்றும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் தன்னை போலீஸ் தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென்பசபிக் பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் அடைக்கலம் ஆனதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தபடியே, தினந்தோறும் சமூக வலைதளங்கள் மூலமாக சொற்பொழிவு ஆற்றி வந்தார் நித்தியானந்தா. இந்தச் சூழலில், அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே ‘ஷூட்’ செய்த வீடியோக்களைத்தான் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் புது தகவல் கிளம்பியது. இதுதொடர்பாக, இன்று விளக்கமளித்திருக்கிறார் நித்தியானந்தா.
நித்தியானந்தா விளக்கம்
அவர் அளித்திருக்கும் விளக்கத்தில், “27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்” என்றிருக்கிறார்.