இலங்கை பொருளாதாரம் திவாலானது எப்படி?

இலங்கை தனது வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் முதியவர்கள் இறந்து போயிருக்கின்றனர். பேப்பர் தட்டுப்பாட்டினால் மாணவர்களின் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. பெட்ரோல் பங்க் கடைகளில் கூட்டம் முண்டியடிப்பதால் இராணுவம் பாதுகாப்பிற்கு என இறக்கப்பட்டிருக்கிறது. வாழமுடியாமல் இதுவரை தமிழகத்தின் கடற்கரையில் இலங்கைத் தமிழர்கள் சிலர் படகு மூலம் வந்திருக்கின்றனர்.

நாடெங்கும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கை எப்படி மீண்டு வரப்போகிறது? இப்பிரச்சினைக்கு காரணம் என்ன? அதன் வரலாறு என்ன?

மக்கள் தொகை நோக்கில் தமிழகத்தோடு ஒப்பிடும் போது இலங்கை ஒரு சிறிய நாடுதான். அதன் மக்கள் தொகை 2,19,23,000. தோராயமாக 2 கோடியே 20 இலட்சம். இலங்கை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் வரிசையில் வருகிறது.

அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 ஆம் ஆண்டு கணக்கின் படி 80.7 பில்லியன் டாலர். தனிநபர் வருமானம் அதே ஆண்டில் 3,682 டாலர். இதே ஆண்டின் படி வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் 11.3% பேர். இவர்கள் ஒரு நாளைக்கு 3.20 டாலருக்கும் குறைவாக கூலி பெறுகின்றனர்.

இலங்கையின் முக்கியத் தொழில்களில் ஒன்று விவசாயம். இதில் தேயிலை, ரப்பர், தேங்காய், புகையிலை போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் தேயிலை கணிசமாக உற்பத்தியாகிறது. ஆயத்த ஆடைத் தொழிலும் இலங்கையில் கணிசமாக நடக்கிறது. இலங்கையின் முக்கிய வருமானம் ஈட்டும் தொழிலில் ஆடைத்துறைக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறை ஆகும்.

2021 ஆண்டின் படி இலங்கை 15.1 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்து 20.6 டாலருக்கு இறக்குமதி செய்திருக்கிறது.

ஏற்றுமதியில் தைத்த ஆடைகள், தேயிலை, எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி.சேவைகள், ரப்பர் பொருட்கள், மீன்கள், விலை உயர்ந்த கற்கள் ஆகயவை இருக்கின்றன. இறக்குமதியில் பெட்ரோலியப் பொருட்கள் 12.3%, கணினி பொருட்கள் 9%, எலக்ட்ரானிக் பொருட்கள் 7.1%, மற்றும் பிளாஸ்டிக், பருத்தி, கனரக மெட்டல், கப்பல் மற்றும் படகுகள், இரும்பு, எஃகு, அலுமினியம் போன்றவை இருக்கின்றன.

இலங்கை ஏற்றுமதியில் அமெரிக்கா 25.29%, பிரிட்டன் 9.18%, இந்தியா 6.09%, ஜெர்மனி 5.75%, இத்தாலி 5.35% போன்றவை பங்கு வகிக்கின்றன. இலங்கையின் இறக்குமதியில் சீனா 22.96%, இந்தியா 19.30%, அமீரகம் 5.57%, மலேசியா 4.08%, சிங்கப்பூர் 3.96% ஆகியவை பங்களிக்கின்றன. ஏற்றுமதியை விட இறக்குமதி சுமார் 5.5 பில்லியன் டாலர் அதிகம். இதிலிருந்தே இலங்கை கடன் வாங்கித்தான் சமாளிப்பது தெரிகிறது.

2019 ஆம் ஆண்டின் படி இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் வரு 10.4 பில்லியன் டாலராகவும், செலவு 16 பில்லியன் டாலராகவும் இருக்கிறது. பட்ஜெட்டிலியே பற்றாக்குறை கணிசமாக இருக்கிறது.

இலங்கையின் பொருளாதார வரலாறு
1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த போது மற்ற ஆசிய நாடுகளை விட முன்னணியில் இருந்ததது. ஜப்பானுடன் ஒப்பிடக்கூடிய பொருளாதார மற்றும் சமூக குறியீடுகளைக் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் ஜப்பானியரின் சராசரி ஆயுட் காலம் 57.5 ஆண்டுகள் என்றால் இலங்கையரின் ஆயுட் காலம் 54 ஆண்டுகளாகும். ஆனால் பின்னர் படிப்படியாக கிழக்காசிய நாடுகள் பலவும் இலங்கையின் வளர்ச்சியை முந்திச் சென்றன. ஆகஸ்டு 1950 இல் இலங்கை மத்திய வங்கி அமைக்கப்பட்டது. அதே ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்திலும் இலங்கை சேர்ந்தது.

1960 மற்றும் 70 களலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி சிறிய அளவில் அல்லது கணிசமாக ஏற்பட்டது. அன்னியச் செலவாணி பற்றாக்குறை, கடன் நெருக்கடி போன்றவையோடு கூடவே ஜே.வி.பி மூலம் தெற்கு இலங்கையில் உள்நாட்டுச் சண்டையும் நடைபெற்றது. அதே போன்று வடக்கு இலங்கையில் தமிழர்களுடனான முரண்பாடு வேர் விடத் துவங்கியது.

1977 முதல் 1994 வரை இலங்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அதிபராக ஆண்டார். 77 முதலே இலங்கை சோசலிசக் கொள்கையிலிருந்து விலக ஆரம்பித்தது. தனியார்மயத்தை அமல்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை சர்வதேச போட்டிக்கு திறந்து விட்டது. 2001 இல் இலங்கை திவாலாகும் நிலையை அடைந்தது. அப்போது அதனுடைய கடன் மொத்த தேசிய வருமானத்தில் 101% இருந்தது.

எரியும் இலங்கை : தீவுநாட்டை சிதைத்த ராஜபக்சே சகோதர்களின் கதை

அப்போது புலிகளோடு தீவிரப் போர் நடந்து கொண்டிருந்தது. அதைத் தவிர்க்க புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டது இலங்கை அரசு. மேலும் கணிசமான வெளிநாட்டுக் கடன்களை பெற்று செலவாணி நெருக்கடி தவிர்க்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசாங்கம் அரிசி, தானியங்கள் மற்றும் உள்நாட்டு நுகர்வுக்கான பொருட்களை பெருமளவு உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தியது. இருப்பினும் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போர் பொருளாதார வளர்ச்சியை குறைத்தது. உள்நாட்டுப் போரில் புலிகள் மட்டுமல்ல, ஜனதா விமுக்தி பெரமுனாவின் எழுச்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஜே.வி.பி கிளர்ச்சியை அடக்கியதைத் தொடர்ந்து தனியார்மயமாக்கம், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி ஆகியவை கொஞ்சம் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவின. 1993 இல் வளர்ச்சி 7% ஆக உயர்ந்தது.

1970 ஏற்றுமதியில் தோட்டப்பயிரின் பங்கு 63% என்றால் 1996 இல் அது 20% ஆக குறைந்தது. இதன் பொருள் தோட்டப்பயிரின் அளவு குறையவில்லை. மாறாக ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 96 இல் 63% ஆக உயர்ந்தது. தேசிய மொத்த உற்பத்தியும் வளர்ந்தது. ஆனால் வறட்சி மற்றும் போர் காரணமாக 96 இல் வளர்ச்சி 3.8% ஆக குறைந்தது. 97 – 98 இல் பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக உயர்ந்து 99 இல் 3.7% ஆக குறைந்தது. இப்படி வளர்ச்சி என்பது ஏற்றத் தாழ்வாகவே இருந்தது.

இப்படியாக 2001 இல் மொத்த தேசிய வருமானத்தின் வளர்ச்சி -1.4% என எதிர்மறையாக இருந்தது. அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இலங்கையின் உள்நாட்டுப் போர் காரணமாக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. 2002 முதல் 2004 வரையிலான உள்நாட்டுப் போரின்றி இருந்த அமைதிக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு, பங்குச் சந்தையின மறுமலர்ச்சி, அதிகரித்த அந்நிய முதலீடு காரணமாக பொருளாதாரம் சற்றே மீட்சியடைந்தது. 2002 இல் மட்டும் அன்னிய நிதி முதலீடு சுமார் 246 மில்லியன் டாலர் வந்தது.

பிறகு மகிந்த இராஜபக்சே அரசாங்கத்தின் காலத்தில் திடீரென்று தனியார்மயமாக்கல் செயல்முறை நிறுத்தப்பட்டது. சில நிறுவனங்கள் மீண்டும் தேசியமயமாக்கப்பட்டன. இதனால் பொருளாதாரம் தேங்கியது. அரசு செலவு அதிகரித்தது. பெரும் மோசடிகள், ஊழல்கள் நடந்தது.

2005 இல் மீண்டும் புலிகளின் மீதான உள்நாட்டுப் போர் துவங்கியது. இதனால் பாதுகாப்புச் செலவினங்கள் மிக அதிகமாகத் துவங்கின. உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியுடன் உலக பெட்ரோலிய விலை உயர்வினால் இலங்கையின் பணவீக்கம் 20% ஆக உயர்ந்தது.

நன்றி: செய்தி சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *