ஜனாதிபதி கோத்தபாய பதவி விலகுவதே ஒரே தீர்வு!
கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயமாக பதவி விலகி செல்ல வேண்டும். அதன் பின்னரே தற்காலிக தீர்வு குறித்து சிந்திக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகி சென்றதுடன் நாடாளுமன்றத்துக்கு உள்ளே ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்து நாட்டைக்கொண்டு நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முதலாவது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்த பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியிருக்கிறது. தற்போது பாரிய அரசியல் நெருக்கடி காணப்படுகிறது. எனவே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அரசியல் தலைமைத்துவம் அவசியமாகும். அதனால் மக்கள் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயமாக பதவி விலகி செல்ல வேண்டும். அதன் பின்னரே தற்காலிக தீர்வு குறித்து சிந்திக்க வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி பதவி விலகி சென்றதுடன் நாடாளுமன்றத்துக்கு உள்ளே ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்து நாட்டைக்கொண்டு நடத்த முடியும். அல்லது அரசியல் அமைப்புக்கு ஒரு புதிய பிரிவை உட்படுத்தி ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டரை வருடங்களாக குறைக்க முடியும்.
ஜனாதிபதி தனது பதவியை முடித்துக்கொண்டு வெளியேறினால் புதிய ஜனாதிபதியை தேர்தலில் தெரிவு செய்யலாம். அத்துடன் நாடாளுமன்ற தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு பல சந்தர்ப்பங்கள், மாற்று வழிகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.