இம்முறை வரலாற்றில் மிக மோசமான புத்தாண்டை மக்கள் கொண்டாட உள்ளனர்!

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சித்திரைப் புத்தாண்டை இம்முறையே மக்கள் கொண்டாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இன்று எரிபொருள் இன்றி பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்தோடு, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அமைச்சரவையை முழுமையாக அகற்றிவிட்டு, சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டும் என குறிப்பிட்டார்.

மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய அரசாங்கமொன்றே தற்போது அவசியம். நிதியமைச்சராக செயற்பட்ட பெசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகளே இந்த நிலைமைக்கு பிரதான காரணம், அவரால் மக்கள் நம்பிக்கையை வெல்ல முடியாமல் போயுள்ளது.

இந்த நேரத்தில் முழு நாடும் எம்மை நோக்கியே பார்த்துக்கொண்டிருக்கிறது. எம்மால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதா, ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருக்கிறார்கள் என்று மக்கள் நினைப்பதாகவும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

இந்த நெருக்கடியில் கால்பந்தாட்டம் விளையாட யாரும் நினைக்க வேண்டாம். நாடு மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. நாம் எல்லோரும் ஒன்றுகூடுவோம். நாடு பற்றி சிந்திப்போம், நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம். இந்த நேரத்தில் சுய இலாபத்திற்காக செயற்படாமல், நாட்டிற்காக செயற்படுவோம் எனவும் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *