வேலை நேரத்தில் கைப்பேசி பயன்படுத்த தடை!
தமிழகத்தில் அரச ஊழியர்கள் வேலைநேரத்தில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த விரைவில் தடை விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரச ஊழியர்கள் அலுவலக நேரங்களில் கைத் தொலைபேசியைப் பயன்படுத்துவதும், அதன் மூலம் வீடியோ எடுப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இடம்பெற்ற வழக்கு ஒன்றை விசாரித்த செய்த நீதிபதி ”அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கைத் தொலைபேசியைப் பயன்படுத்துவது தொடர்பாகவும், அலுவலக நேரத்தில் கைத் தொலைபேசி மூலமாக எடுக்கப்படும் வீடியோக்களால் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழலில், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் அரச ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அலுவலக பயன்பாட்டுக்குத் தனிப்பட்ட தொலைபேசிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இவற்றை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் நான்கு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்” எனவும் உத்தரவிட்டுள்ளார்.