நாடு நாசம் நாட்டைக் காப்போம் எனும் தொனியில் கொழும்பில் மக்கள் அலை!
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடு நாசம் – நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலகம் முன்பாக வீதியை மறித்து இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் வாழ்க்கைச் செலவை அரசாங்கம் தாங்க முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் இதன்போது தெரிவித்தனர்.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பிற்கு பேரணியாக வருகை தந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், செயலக வளாகத்திற்குள் போலி சவப்பெட்டியையும் மலர் மாலையையும் வீசியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வளாகத்திலிருந்து வெளியே வருமாறு கோரியதையடுத்து விசேட அதிரடிப் படை வளாகத்தை முற்றுகையிட்டது.
இந்த எதிர்ப்பு பேரணியில் ஐக்கிய ஊழியர் சங்கம், ஐக்கிய மகளிர் அமைப்பு, சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.