காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை இவ்வருடம் டிசம்பர் வரை 6 மற்றும் 3 மாதங்களுக்கு நீடிப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இவ்வருடம் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரை காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களால் நீடிக்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இவ்வருடம் ஜூலை 01 முதல் செப்டெம்பர் 01 வரை காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 3 மாதங்களால் நீடிக்கப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை சரிபார்ப்பதற்கு, பாதுகாப்பான முறையுடனான கணனி மயப்படுத்தப்பட்ட செயலியொன்றை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு பதிலாக ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் தற்காலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை தபால் மூலம் உரிய நபருக்குகு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *