குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் பரீட்சை எழுதிய மாணவி!

குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில்  மாணவி ஒருவர் 10 ஆம் வகுப்புப்  பரீட்சை எழுதிய சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

மால்டாவில் உள்ள நனரை என்ற கிராமத்தை சேர்ந்த ‘அஞ்சராகதுன்னா ‘ என்ற மாணவியே இவ்வாறு  பரீட்சை எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பாடசாலைகள் மூடப்பட்டதால் குறித்த  மாணவி ஒன்லைன் மூலம் கல்வியைத் தொடர்ந்து வந்துள்ளார்.

இந் நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு அப் பகுதியைச் சேர்ந்த முகமது சலீம் என்ற நபருக்குத்  திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து  குறித்த மாணவி கர்ப்பம் அடையவே வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு  வீட்டில் இருந்த படி கல்வியைத் தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தேர்வு எழுதுவதற்காகத் தயாராகிக் கொண்டு இருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 மணி நேரம் மயக்க நிலையில் இருந்த அந்த மாணவி, மயக்கம் தெளிந்ததும் 10ஆம் வகுப்புப் பரீட்சை  எழுத செல்ல வேண்டும் என்று தெரிவித்ததாகவும், இதையடுத்து அவரை சக்கர நாற்காலியில் வைத்து அவரது பெற்றோர் பாடசாலைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவரை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள் அவருக்கு பரீட்சை எழுதுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *