அமெரிக்க உக்ரைனின் அழைப்பை நிராகரித்தது!
உக்ரைனில் ரஷ்ய விமானங்களுக்கு வான் தடை வலயம் ஒன்றை உருவாக்குவது ‘நல்ல யோசனை இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கும் வெள்ளை மாளிகை அது ரஷ்யாவுடன் அமெரிக்கா நேரடி போருக்கு வித்திடும் என்று குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ‘வான் தடை வலயம்’ ஒன்றை விதிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் நோட்டோவை உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். மேற்கத்தேய கூட்டணிகள் தமது பங்கை செய்தால் ஆக்கிரமிப்பாளரை உக்ரைனால் தோற்கடிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் உக்ரைனில் ரஷ்யாவுடனான போருக்கு அமெரிக்க துருப்புகளை அனுப்பும் திட்டத்தை பைடன் நிராகரித்துள்ளார்.
“ரஷ்ய விமானங்களை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்துவதாக இது இருக்கும். இது நிச்சயம் மோதலை விரிவடையச் செய்யும். அது ஜனாதிபதி விரும்பாத ஒன்று. அதனாலேயே இது நல்ல யோசனையாக இல்லை” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜேன் சக்கி குறிப்பிட்டுள்ளார்.