இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!
உக்ரைன் நெருக்கடியின் அடிப்படையில் உள்நாட்டு எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
அடுத்த வாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என தொழிற்சங்கவாதி ஆனந்த பாலித தெரிவித்தார்.
சமீபத்திய விலை அதிகரிப்பு காரணமாக லங்கா ஐஓசி ரூ.1.2 பில்லியன் லாபத்தைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். லங்கா ஐஓசி ஜனவரி 2020 முதல் மார்ச் 2021 வரை வரம்பற்ற இலாபத்தை ஈட்டியதுடன், கடந்தாண்டு டிசம்பர் மாதம் உலகளாவிய எரிபொருள் விலைகள் குறைவடைந்த போது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக கூறினார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிகரிக்க விரும்பிய விலையை விட லங்கா ஐஓசி எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது, பொதுமக்கள் மேலும் சுமைக்கு ஆளாக நேரிடும் என்றும் பாலித தெரிவித்தார்.