14 திருமணம் செய்த வைத்தியர் காதலர் தினத்தன்று கைது!
வைத்தியர் ஒருவர் 14 பெண்களைத் திருமணம் செய்து அவர்களை ஏமாற்றிய சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டம் பட்குரா பகுதியை சேர்ந்தவர் 54 வயதான ரமேஷ் சந்திர ஸ்வெய்ன். ஹோமியோபதி வைத்தியரான இவர் கடந்த 1979ஆம் ஆண்டு முதலாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் 1982 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், ஒடிசாவை சேர்ந்த இவ் இரு மனைவிகள் மூலம் அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
அதன்பின்னர், வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறிக்கொண்டு, டெல்லி, மராட்டியம், மேற்குவங்காளம், ஆந்திரா, ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த, விவகாரத்து பெற்ற அல்லது தனியாக வாழ்ந்து வரும் 12 பெண்களை, வைத்தியர் என்ற மதிப்பையும் போலி அடையாள அட்டை, ஆவணங்கள், ஆதார் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியும் அவர்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளதாகவும் அதன் பின்னர் அவர்களது நகை, பணத்தை எடுத்துக்கொண்டு வேறு மாநிலத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ரமேஷ் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தமையை அடுத்து நீண்ட நாள் தேடுதல் வேட்டையின் பின்னர் நேற்று முன்தினம் (14) ரமேஷை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது