பாம்பாட்டியை பாம்பு கடித்ததால் பரபரப்பு!
பாம்பாட்டி ஒருவரின் நாகப்பாம்பினால் ரம்புக்கணை வைத்தியசாலை சிறிது நேரம் அல்லோலகல்லோலப் பட்ட சம்பவம் ஒன்று சமீபத்தில் இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கணை நகரில் பாம்பாட்டியொருவர் பாம்பாட்டி கொண்டிருந்தபோது கூட்டம் சேர்ந்ததால் கலவரமடைந்த நாகப்பாம்பு பாம்பாட்டியின் காலை தீண்டி உள்ளது.
பாம்பாட்டி இதையடுத்து ரம்புக்கணை ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் பாம்பு பெட்டியும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பாம்பாட்டியின் நிலை மோசமடையவே இவர் அம்புலன்ஸ் வண்டி மூலம் பாம்பு பெட்டியுடன் கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாம்பாட்டி பாம்பு பெட்டியை அருகே வைத்துக்கொண்டு வார்டில் சிகிச்சை பெற்று வந்ததை பார்த்த ஏனைய நோயாளிகளும் நோயாளிகளை பார்க்க வந்தவர்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் சிறிது நேரம் வைத்தியசாலை அல்லோலகல்லோலப் பட்டுள்ளது. வைத்தியசாலை ஊழியர்கள் பாம்பு பெட்டியை பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படி எடுத்துக்கூறியும் பாம்பாட்டி அதை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர்.
திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வந்து பாம்பை பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்தியசாலையிலுள்ள பாதுகாப்பான லாச்சியொன்றில் பாம்பாட்டி சிகிச்சை முடிந்து வெளியேறும் வரை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.