வாடகைத்தாய் மூலம் குழந்தை மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரின் கணவர் நிக் ஜோனாஸ், வாடகைத்தாய் மூலம் தாங்கள் பெற்றோர் ஆகியிருக்கும் மகிழ்வை நேற்று உலகத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

நடிகை பிரியங்கா சோப்ராவும் அவர் கணவர் நிக் ஜோனாஸும், வாடகைத் தாய் மூலம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்கும் மகிழ்வை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், குழந்தை பற்றிய அறிவிப்புடன், இந்த பெர்சனல் தருணத்தில் தங்களுக்கான பிரைவசியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரபல ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் நிக் ஜோனாஸ், டிசம்பர் 2018-ல் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டனர். இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி மூன்று நாள்கள் நடந்த அந்தத் திருமணமும், அவர்களின் மண ஆடைகளும் வைரல் ஆகின.

இந்த ஜோடி, உலகின் பிரபல ஃபேஷன் நிகழ்வான மெட் காலா 2017'-ல் முதன்முதலில் சந்தித்துக்கொண்டனர். இருவருக்கும் ஒரே டிசைனர், ரால்ஃப் லாரன். அவர் ஆடைகளுக்கான பிரதிநிதிகளாகமெட் காலா 2017′ நிகழ்வில் இருவரும் தோன்றியபோது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. சில மாதங்கள் காதலுக்குப் பிறகு, இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரின் கணவர் நிக் ஜோனாஸ், வாடகைத்தாய் மூலம் தாங்கள் பெற்றோர் ஆகியிருக்கும் மகிழ்வை நேற்று உலகத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

“வாடகைத் தாய் மூலம் நாங்கள் எங்கள் குழந்தையை வரவேற்பதை உங்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறோம். இந்த சிறப்பான தருணத்தில் எங்கள் பிரைவசிக்கும் முக்கியத்துவம் தர உங்களிடம் வேண்டிக்கொள்கிறோம். மிக்க நன்றி” என்ற பதிவை, பிரியங்கா, நிக் ஜோனாஸ் இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், DailyMail ஊடகம் செய்தியில், கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், வாடகைத் தாய் மூலம் பிறந்து, 27 வாரமான அந்தக் குழந்தை இப்போது கண்காணிப்பில் உள்ளதாகவும், சீக்கிரமே தன் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிரியங்கா சோப்ராவைவிட அவர் கணவர் நிக் ஜோனாஸ் 10 வருடங்கள் இளையவர் என்பது குறித்து பிரியங்காவிடம் கேட்கப்பட்டபோது, “வயது வித்தியாசமோ, கலாசார வித்தியாசமோ எங்களுக்கு ஒரு பிரச்னை இல்லை” என்று பதில் அளித்திருந்தார். சொன்னதுபோலவே தங்கள் மணவாழ்க்கையை எடுத்துச் சென்று, இன்று பெற்றோராகத் தங்களை அறிவித்திருக்கும் இந்த ஜோடிக்கு உலகம் முழுக்கவிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *