சஹ்ரானின் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் குழப்பம்!
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சிங்கள மொழியில் காணப்பட்டமையினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 திகதிக்கு வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளது.
குறித்த குற்றப்பத்திரிகையினை சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்னத்தின் கையெழுத்துடன் அவர் சார்பாக அரச சட்டவாதியினால் கல்முனை மேல் நீதிமன்றில் இன்று(10) தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய குற்றப் பகிர்வுப் பத்திரமானது கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
குற்றப்பத்திரமானது சிங்கள மொழியில் காணப்பட்டமையினால் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேக நபர் தமிழ் பேசும் ஒருவராக இருப்பதனால் குற்றப்பத்திரத்தில் உள்ள சகல விடயங்களையும் தமிழ் மொழியில் மாற்றி வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.
இதன்போது சஹ்ரானின் மனைவியான பிரதிவாதி பாத்திமா ஹாதியா மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்திற்கு கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.