மக்களுக்கு பயனளிக்காத நேரத்தை வீணடித்த வரவு செலவுத்திட்டம்
இலங்கை மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்காது, மக்களின் நேரத்தை வீணடித்த வரவு செலவுத்திட்டம் ஒன்று ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சி தெரிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தால் ஸ்ரீலங்காவை இனியும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியாது எனவும், ஆகவே அந்த இயலுமையைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறும் அந்தக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லையென தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்று மாலை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
இதன்போது கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர் சாகல ரட்ணாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய மற்றும் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இந்தப் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
அத்தியாவசியப் பொருட்கள் முதல் நாட்டு மக்களின் சாதாரண வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் அனைத்தின் விலைகளும் அதிகரித்துள்ளமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டதுடன், மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டது.
நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்காத இரண்டு மணித்தியாலங்களை வீணடித்த வரவு செலவுத்திட்டமாகவே இதனைப் பார்கின்றோம். ராஜபக்ச குடும்பத்திற்கு இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியாது.
2001 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்த நாட்டை நாங்கள் மீட்டுத்தோம். ஆகவே அந்த இயலுமையை கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டை ஒப்படைத்துவிட்டு வீடு செல்லுமாறு கேட்கின்றோம்.
பசில் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்கள் இன்று பசிலுக்கும், அவரது குடும்பத்திற்கும் அனைத்தும் சரியாகியுள்ளது. எனினும் நாட்டு மக்களுக்கு எதுவும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்