டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் உலக சாதனை!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மணிப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணியின் சுழற்பந்து வீச்சாளர் 4 ஓவர்களை மெய்டனாக வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், கடந்த 4ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்று இந்த தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் மணிப்பூர்-விதர்பா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி  முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின், துவக்க ஆட்டக்காரர் அதர்வா டைட் 21 பந்தில் 46 ரன், ஜிடேஷ் ஷர்மா 31 பந்தில் 71 மற்றும் வான்கடே 16 பந்தில் 49 என ரன் மழை பொழிந்ததால், விதர்பா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்தது.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய மணிப்பூர் அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் சரிந்தன. அந்த அணியில் அதிகபட்சமாக யும்னம் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே அவுட் ஆயினர். இதனால் மணிப்பூர் 55 ரன்னில் சுருண்டது. 167 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா வென்றது. விதர்பா அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்நேவர் அசத்தினார். அதாவது மணிப்பூர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்காத அவர், இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி சாதித்தார். இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன், உலகின் எந்த ஒரு பந்துவீச்சாளரும் டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர்களையும் மெய்டன் வீசியது கிடையாது. இதனால் அக்‌ஷய் கர்நேவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது பெயர் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *