பெண்கள் இனி கர்ப்பமானால் அரசுக்கு அறிவிக்க வேண்டும்!
சட்டவிரோத கருக்கலைப்பை தடுக்கும் நோக்கில், இனி பெண்கள் கர்ப்படைந்தால் அரசுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும் என ஈரானிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈரானின் வடக்கு மஜந்தரன் மாகாண நீதித்துறை துணை அமைச்சக அதிகாரிகளே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆய்வகங்கள் இந்த விவகாரத்தில் அரசுக்கு தெரிவிப்பதன் மூலம் சட்டவிரோத கருக்கலைப்புகளை தடுக்க முடியும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஆய்வகங்களில் சென்று தாங்கள் கர்ப்பமடைந்துள்ளதை உறுதி செய்து கொள்ளும் பெண்களின் தரவுகள் மட்டும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என கடிதம் ஒன்றில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த சர்ச்சைக்குரிய கடிதம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாக, ஈரானின் மொத்த பெண்களும் கொந்தளித்துப் போயுள்ளனர்.
தனிமனித சுதந்திரம் என்பது அர்த்தமற்றதாக போய்விட்டது என்றார் பெண்மணி ஒருவர். ஈரான் நாட்டை பொறுத்தமட்டில் கருக்கலைப்பு என்பது சட்டவிரோதமாகும்.
பிறக்கவிருக்கும் குழந்தையால் தாய்க்கு ஆபத்து அல்லது இருவருக்கும் ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் உறுதி செய்தால் மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படுகிறது.
திருமணமாகாத பெண்கள் கருவுற்று, கருக்கலைப்புக்கு முயற்சிப்பது ஈரானில் சட்டவிரோதமாகவும் கருதப்படுகிறது. ஈரானில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9,000 சட்டரீதியான கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன,
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250,000 சட்டவிரோத கருக்கலைப்புகள் நடைபெறுகிறது என ஈரானிய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சட்டவிரோத கருக்கலைப்பு முன்னெடுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு கடும் தண்டனையும் வழங்கப்படுகிறது.