எரிவாயுவை இறக்குமதி செய்ய டொலர் இல்லை?
எரிவாயு இறக்குமதி செய்ய டொலர்கள் இல்லையா? மீண்டும் பற்றாக்குறையா? விலையை மீண்டும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? புதிய விலை 2147 ஆக உயர்வா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அந்நியச் செலாவணி நெருக்கடியால், எரிவாயுவை இறக்குமதி செய்ய கடன்பத்திரங்களைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை எரிவாயுவை இறக்குமதி செய்ய விரைவில் டொலர்களைச் செலுத்த வேண்டும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்காததால் அந்த நிறுவனத்தின் இழப்பு 8 பில்லியனாக அதிகரித்துள்ளது. மேலும் இது அதன் துணை நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கூடுதல் அழுத்தம் கொடுக்கிறது.
இதற்கிடையில், தொடர்ந்தும் நஷ்டத்தை அனுபவிப்பதாகத் தெரிவித்து எரிவாயு விலையை அதிகரிக்க லாஃப் நிறு வனம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 291 ரூபாவாலும் 05 கிலோ சிலிண்டரின் விலையை 114 ரூபாவாலும் உயர்த்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், 12.5 கிலோ சிலிண்டரின் விலை 2147 ரூபாவாகவும் 5 கிலோ சிலிண்டரின் விலை 858 ரூபாவாகவும் உயரும் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 12.5 சிலிண்டர் லாஃப் கேஸ் விலையை 363 ரூபாவாலும் மற்றும் 5 கிலோ சிலிண்டரின் விலையை 145 ரூபாவாலும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்குக் காரணம், விலையை அதிகரிக்காமையால் எரிவாயு வியாபாரம் நஷ்டம் எனக் கூறி அந்த நிறுவனம் எரிவாயு இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாகும்.