இலங்கையில் 80 பிரபலங்களை பலியெடுத்த கொரோனா!

இலங்கையில் புகழ்பெற்ற சுமார் 80 பேர், கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, பிரபல வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், தொழில்சார் முக்கியஸ்தர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக சுமார் 80 பேர் வரை கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேவேளை, நடிகர்கள், பாடகர்கள் உள்ளடங்களான சுமார் 300 கலைஞர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 27 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த பிரமுகர்களில், முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார, சைட்டம் நிறுவனத்தின் பிரதானியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் நெவில் பெர்ணான்டோ, கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் R.ராஜமகேந்திரன், ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவரும், பிரபல பாடகருமான சுனில் பெரேரா ஆகியோரும் அடங்குகின்றனர்.

அத்துடன், இராணுவ ஆய்வு திட்டம் மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் S.D. உதயசேன, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மொழி பெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டர், பிரபல சட்டத்தரணி கௌரி நவராசா ஆகியோரும் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.

அதேவேளை, கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரும், கொவிட் தொற்றினால் ஏப்ரல் மாதம் 8ம் திகதி உயிரிழந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதியும், கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் R.ராஜமகேந்திரன் கடந்த ஜுலை மாதம் 25ம் திகதியும் கொவிட் தொற்றினால் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், சைட்டம் நிறுவனத்தின் பிரதானியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் நெவில் பெர்ணான்டோ கொவிட் தொற்றினால் கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி உயிரிழந்திருந்தார்.

முன்னாள் சபாநாயகரான W.J.M. லொக்குபண்டார, கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதியும், ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவரும், பிரபல பாடகருமான சுனில் பெரேரா கடந்த 6ம் திகதியும் உயிரிழந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *