இந்தியா-இங்கிலாந்து 3-ஆவது டெஸ்ட் வலுவான நிலையில் இங்கிலாந்து!
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவை விட இங்கிலாந்து 345 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா,இங்கிலாந்து இடையே நடைப்பெற்று வரும் டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் பேட்டிங் வரிசை சோபிக்காததால் 78 ரன்களுக்கு ஆட்டம் கண்டு அனைத்து விக்கெட்களையும் இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
அதன்பின், தனது பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து, முதல் விக்கெட்டிற்கு 135 ரன்களை எடுத்தது, அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் பொறுப்புணர்ந்து நிதானமாக ஆட அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த போட்டியில் மாயஜால பந்துவீச்சால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங்கை நிலைகுலைய செய்த இந்திய பந்துவீச்சாளர்களின் பாச்சா இந்தப் போட்டியில் பலிக்கவில்லை.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 8 விக்கெட்களை இழந்து 423 ரன்களுடன், இந்தியாயை விட 345 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அவ்வணியின் கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் எடுத்தார்.