வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் அறிவுரை கோவை!

கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான அறிவுரை கோவை சுகாதாரதுறை அமைச்சினால் வெளியிட்டுள்ளது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால், நோய் அறிகுறிகள் அற்ற அல்லது சிறிய அளவிலான நோய் அறிகுறிகள் உள்ள நோயாளர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி சுற்றுநிருபம் ஒன்றை மாகாண மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதா அல்லது வீட்டில் வைத்து பராமரிப்பதா என்பது குறித்த தீர்மானத்தை குறிப்பிட்ட பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள வைத்திய அதிகாரி தீர்மானிப்பார்.

இரண்டு வயது தொடக்கம் 65 வயது வரையான அனைவருக்கும் இந்த நடைமுறை ஏற்புடையதாகும்.

இரத்த அழுத்தம் இருதய நோய் நீரிழிவு முதலான தொற்றா நோய்கள் அற்றவர்களே இவ்வாறு வீட்டில் வைத்து பராமரிக்கப்படுவார்கள்.

வீட்டிலிருக்கும் நோயாளர்கள் தம்மை சிறந்த முறையில் தனிமைப்படுத்திக்கொண்டு, உரிய சுகாதார வழிமுறைகளை பேணுவதன் மூலம் விரைவில் குணமடைய முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

வீட்டில் உள்ள நோயாளர்கள் 14 நாட்களின் பின்னர் வீட்டை விட்டு வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவர்.

இருப்பினும்,
அதற்கு முன்னதாக PCR அல்லது Antigen பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அதில் (negative) எதிர்மறையாக இருக்கும் பட்சத்திலேயே அவர்கள் வெளிச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *