இலங்கையில் பரவியுள்ள டெல்டாவை கட்டுப்படுத்த எஸ்ட்ரா செனேகா அதிக செயல்திறன் கொண்டது!
இலங்கையில் பரவியுள்ள கோவிட் ‘டெல்டா’ தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஒக்ஸ்போர்ட் – எஸ்ட்ரா செனெகா தடுப்பூசி 95% செயல்திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹல இதனைத் தெரிவித்துள்ளார்.
நான்கு மாதங்களுக்கு மேல் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் இது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
ஒக்ஸ்போர்ட்- எஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் முதல் மற்றும் இரண்டாவது அளவுகள், இந்த பரிசோதனைக்குப் பயன்படுத்தப்பட்டன.
இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மற்றும் கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றது என்று பேராசிரியர் தொடம்பஹல தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திய இரண்டு மாதங்களுக்குப் பின்னர் உடலில் பிறப்பொருள் எதிரிகள் உருவாவது சோதனைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, இலங்கையில் உள்ள மக்களுக்கு கொவிஷியல்ட் தடுப்பூசிகளை வழங்குவது மிகவும் பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையில் கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் மருத்துவர்கள் உட்பட்ட பல நிபுணர்கள் பங்கேற்றனர்.
இதேவேளை சீனாவில் தயாரிக்கப்படும் சினோஃபார்ம் தடுப்பூசி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசி மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் இன்னும் ஆராய்ச்சியில் உள்ளதாக தொடம்பஹல கூறியுள்ளார்.