இலங்கைப் பெண்ணிடம் பண மோசடி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார் நடிகர் ஆர்யா!

இலங்கை பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக மேற்கொள்ளப்பட்ட புகார் தொடர்பாக நேற்று மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜராகி விளக்கமளித்துள்ளர்.

இலங்கையை சேர்ந்த வித்யா என்பவர் தற்போது ஜேர்மனியில் வசிக்கிறார். அங்கு சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் தன்னை, திருமணம் கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக சிபிசிஐடியிடம் புகார் அளித்தார். 

கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கொடுத்த வாக்குறுதியை மீறி, சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

சாயிஷாவுடனான திருமணம் குறித்து ஆர்யாவிடம் வித்யா கேள்வி எழுப்பியபோது, சாயிஷாவின் பெற்றோர் தனது கடன்கள் அனைத்தையும் செலுத்துவதாக உறுதியளித்ததால் மட்டுமே அவர் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாக கூறியதாகவும், ஆறு மாதங்களுக்குள் சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் மட்டுமே, தான் அந்த திருமணத்துக்கு சம்மதித்ததாக ஆர்யா கூறியதாக வித்யா தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்யாவிடம் சம்மன் அனுப்பிய சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார், புகாரில் முகாந்திரம் உள்ளதா என்ற அடிப்படையில் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான விசாரணைக்காக நடிகர் ஆர்யா நேற்று மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜரானார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *