ஆபத்தான கட்டத்தில் சுகாதார விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்!
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/08/FB_IMG_1626839870947-8.jpg?resize=616%2C395&ssl=1)
இலங்கையில் கோவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒரு மாத காலம் மிகவும் அவதானம். எனவே, அரசால் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
கோவிட் தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி பெறாதவர்கள் இருந்தால் முடிந்தளவு விரைவில் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவது தடுப்பூசியும் விரைவில் வழங்கப்படலாம்.
கோவிட்டால் தற்போது அதிகமாக உயிரிழப்பவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதுவரையில் இராணுவத்தினரால் கொழும்பு விகாரமஹா தேவி பகுதியில் அஸ்ட்ரா செனேக்காவின் இராண்டாவது தடுப்பூசியும், சினோபார்ம் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்படுகின்றது.
இதனால் மக்கள் முடிந்தளவு வேகமாகத் தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதன்போதும் சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுங்கள் என குறிப்பிட்டுள்ளார்