ரிஷாட்டிடம் விசாரணை நடத்த நடவடிக்கை!

மர்மமான முறையில் தீ காயங்களுடன் உயிரிழந்த ஜுட் குமார் ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் விசாரணைகளை நடத்தவுள்ளதாக நீதிமன்றத்திற்கு, பொரள்ளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதன்படி ,குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியூதீனிடம் விரைவில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பொரள்ளை பொலிஸார், பீ அறிக்கையின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 16 வயது சிறுமி கடந்த 3ம் திகதி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் திகதி உயிரிழந்திருந்தார்.

அந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துவந்த இடைதரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை , இந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சராக ரிஷாட் பதியூதீன் பதவி வகித்த காலப் பகுதியில், அவரது வீட்டில் பணியாற்றிய மலையக யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிந்த 11 மலையக பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை தொடர்பிலும், ரிஷாட் பதியூதீனிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *