சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் பெருக்கும் ஈகைத் திருநாள்!
ஈகைத் திருநாள், ஹஜ் பெருநாள் என போற்றப்படும் பண்டிகை, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை.
இந்த திருநாள் இறைவனின் தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தியாகப் பெருநாள் எனப் பொருள்படும் அரபிய பதமான, ‘ஈத் அல்-அதா’ என்றே அழைக்கப்படுகிறது.
இந்தாண்டு ஹஜ்ஜூப் பெருநாள் இலங்கையில் இன்று 21-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை இறைவனின் பெயரால் பலி கொடுக்கப்படுகிறது.
பலியிட்ட விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கை, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவது பங்கை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
முக்கிய விஷயமாகப் பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது.
புனிதப் பயணக் கிரியைகள், கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதல் ஆகும். அதனால் பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும்.
மேலும் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள் ‘ஹஜ்’ பயணம் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாக கருதுகின்றனர். ஹஜ் பயணம் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதே ஆகும்.
தியாகத் திருநாளான இந்நாளில் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கும் பொன்னாளாக ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.