கோடிக்கணக்கான ரூபாவுக்கு விலை போகும் திமிங்கிலத்தின் வாந்தி!
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/07/Thiminkalam.jpg?resize=580%2C330&ssl=1)
19 கிலோ திமிங்கில வாந்தியை போலீசார் கைப்பற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாவட்டம் திரிசூரில் போலீசார் வாகன சோதனையின் போது பிடிப்பட்ட வாகனம் ஒன்றில் ‘திமிங்கில வாந்தி’ என்று அழைக்கப்படும் அம்பெர்கிரிஸை (Ambergris) இருப்பதைப் பார்த்த அதிகாரிகள் அவற்றை கைப்பற்றினார்கள்.
இதுகுறித்து பேசிய அதிகாரிகள், ”கேரளாவில் அம்பெர்கிரிஸ் விற்கும் ஒரு குழு பிடிபடுவது இதுவே முதல் முறை. கேரள வன பறக்கும் படை மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் நடத்திய நடவடிக்கையின் பின்னர் மூன்று பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் திரிசூரிலிருந்து வந்த ரபீக் மற்றும் பைசல், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஹம்சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
![](https://cdn.ibcstack.com/article/8f4cc90f-97e4-479d-abfd-74a70de49be6/21-60ea0a683f25e.webp)
கேரளாவில் கறுப்புச் சந்தையில் ஒரு குழு அம்பெர்கிரிஸ் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் பிடிபட்டனர்.
ஒரு சில வன அதிகாரிகள் சந்தேக நபர்களை அம்பெர்கிரிஸ் வாங்க விரும்புவதைப் போல அணுகி பின்னர் அவர்களைப் பிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்ரிஸ் எடை சுமார் 19 கிலோ. இது சர்வதேச வாசனை சந்தையில் 30 கோடி வரை போகும் என அதிகாரிகள் கணித்துள்ளார்கள்.
பொதுவாக ‘திமிங்கில வாந்தி’ என்று அழைக்கப்படும் அம்பெர்கிரிஸ், பழுப்பு நிற மெழுகு பொருள், இது விந்து திமிங்கிலங்களின் அடிவயிற்றில் உருவாகிறது.
திமிங்கிலங்களால் வாந்தியெடுக்கப்படும் இந்த பொருள் கோடிக்கணக்கில் விலை மதிக்கத்தக்கது. மத்திய கிழக்கில் ஓமன் கரையோரப் பகுதி அம்பெர்கிரிஸுக்கு பிரபலமானது.
இந்த பொருள் வாசனைத் திரவிய சந்தையில் தங்கத்தைப் போலவே மதிப்புமிக்கது.