சேற்றுக்குழிக்குள் விழுந்தவர்கள் துள்ளக்கூடாது துள்ளினால் மூழ்கவேண்டிய நிலையே ஏற்படும்!
பஸில் ராஜபக்ச பொருளாதார விவகார அமைச்சராக பதவியேற்றால், ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலுக்கு நேர்ந்த கதியே இலங்கையின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.
பஸில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சேற்றுக்குழிக்குள் விழுந்தவர்கள் துள்ளக்கூடாது. அவ்வாறு துள்ளினால் முழுமையாக சேற்றில் மூழ்கவேண்டிய நிலையே ஏற்படும். இலங்கை கடற்பரப்புக்குள் வைத்து எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து அனர்த்தத்துக்குள்ளானபோது, கப்பற்றுறை அமைச்சரும், துறைமுக அதிகாரச்சபையினரும் கதையளந்தனர். இறுதிகட்டத்தில்தான் கப்பல் இழுக்க முற்பட்டனர். அப்போது என்ன நடந்தது, கப்பல் உடைந்து கடலுக்குள் மூழ்கியது.
பஸில் ராஜபக்ச என்பவரும் அவ்வாறுதான், இலங்கை எனும் கப்பலும், பொருளாதாரமும் தீப்பிடித்து எரிந்துள்ளது. எனவே, இவற்றை இழுப்பதற்கான பொறுப்பை பஸிலிடம் கொடுத்தால் இவையும் மூழ்கிவிடும். கடைசியில் கப்பலுக்கு நேர்ந்த கதிதான் எமது நாட்டுக்கும் நேரும்.” – என்றார்.