இந்தியாவின் நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும்!
மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி ‘டெல்டா’ கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது. நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்தால் இந்தியாவின் நிலைமைதான் இங்கு ஏற்படும்.”
அதன்படி ,இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்தியாவில் ‘டெல்டா’ கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் கொடூர தாக்கங்களை நாள்தோறும் அறிகின்றோம். எனவே, மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
‘டெல்டா’ வைரஸ் கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை என்ற பிரதேசத்தில் ஒரு பகுதியில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நாம் எடுத்துள்ளோம்.
மேலும், அந்த வைரஸ் நாடு முழுவதும் பரவினால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்தால் இந்தப் பேரழிவைத் தடுக்கலாம். அதைவிடுத்து முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது. அன்றாடம் வேலை செய்யும் மக்களைப் பட்டினியால் சாகடிக்க முடியாது” என்றார்.