உலக மக்கள் தொகையில் 12% மக்களுக்கு மாத்திரமே தடுப்பூசி கிடைத்துள்ளது!
உலக நாடுகளில் ஜூன் 10-ம் திகதி நிலவரப்படி கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களின் புள்ளி விவரப்படி, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் இதுவரை 12 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 93.20 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக இஸ்ரேலில் 63.1 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதையடுத்து கனடாவில் 62.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் 62.7 சதவீதமாகவும் அமெரிக்காவில் இது 51.4 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் 13.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து கூறிய உலக சுகாதார அமைப்பு, “உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு நாளில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட, மிக அதிக வேகத்தில் தொற்று பரவி வருகிறது.
ஏழை நாடுகளில் தடுப்பூசித் தட்டுப்பாடு நீடிக்கிறது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள முடியும்’ என வருத்தம் தெரிவித்துள்ளது.