காசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மரணம் !
காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் சனிக்கிழமையன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு ஐந்து மாத குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளது. அக்குழந்தையின் தாய், உடன் பிறந்தவர்கள் நான்கு பேர், தாயின் சகோதரி மற்றும் அக்குழந்தையின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில் குழந்தை ஓமர் அல்-ஹதிதியின் தந்தை முகமது அல்-ஹதிதி வீட்டில் இல்லை. “அந்த இடத்தில் ராக்கெட் எதுவும் இல்லை. பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். அமைதியான குழந்தைகள் ஈத் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். இத்தகைய கொடுமையை அனுபவிக்கும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள்,” என்று முகமது அல்-ஹதிதி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
“அக்குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவனது தொடை எலும்பு முறிந்து இருந்தது. உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் நல்ல வேளையாக தற்போது சீரான உடல் நிலையுடன் இருக்கிறான்,” என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.