கிராமத்தைக் கலைக் கூடமாக மாற்றிய 90 வயது மூதாட்டி!
செக் நாட்டைச் சேர்ந்த 90 வயது பாட்டி ஆக்னஸ் காஸ்பர்கோவா, தன் கிராமத்தையே அழகிய ஓவியங்களால் ஒரு கலைக்கூடமாக மாற்றியிருக்கிறார்.
பெரும்பாலான முதியவர்கள் ஆன்மிகம், கொஞ்ச நேரம் பேரக் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது என பரபரப்பாக இருப்பார்கள்.
ஆனால் பாட்டி ஆக்னஸ், தூரிகையும் வண்ணமுமாகக் களத்தில் இறங்கிவிட்டார்.
சிறிய லூவ்கா கிராமத்தில் வீடுகளை ஓவியங்களால் நிறைத்து விட்டார். இங்குள்ள அனைத்து வீட்டுச் சுவர்களிலும் ஓவியங்கள் வரைந்திருக்கிறார். அவர் ஓவியம் வரையத் தொடங்கிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஒரு காலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த இந்தப் பாட்டிக்கு ஓவியம் என்பது சிறு வயதில் பெரும் விருப்பமாக இருந்திருக்கிறது.
பாரம்பரியமான மொரோவியன் சுவரோவியங்களை அவருக்கு மிகவும் பிடிக்கும்.
பாட்டிக்கு ஓவியம் வரைவதற்கான மிகச் சிறந்த இடம் அந்த கிராமத்தில் உள்ள கிறித்துவ தேவாலயம்தான். இங்கு அவர் அழகிய மலர்களை வரைந்துள்ளார்.
உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் லூவ்கா கிராமத்திற்கு வருகை தருகிறார்கள். அந்தப் பாட்டியின் வண்ண ஓவியங்களைப் பார்த்து மகிழ்ந்து செல்கிறார்கள்.
அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைச் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உற்சாகம் அடைகிறார்கள்.
குளிர்காலங்களில் அவர் சுவர்களில் வரைவதை நிறுத்திவிடுகிறார். எப்போதும் ஆக்னஸ் பாட்டி தூரிகையும் கையுமாக வசந்த காலத்திற்காகக் காத்திருக்கிறார்.
அதுதான் ஓவியம் வரைவதற்கான சரியான நேரம். அவர் அதிகமாக நீல நிறத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்.
தன்னுடைய மகிழ்ச்சிக்காக மட்டும் ஓவியம் வரைவதாக ஆக்னஸ் காஸ்பர்கோவா சொல்கிறார்.