கெஸ்பேவவில் இரண்டு சூப்பர் விற்பனை நிலையங்களுக்குப் பூட்டு 300 பேர் தனிமைப்படுத்தலில்!
கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்றைய தினம் 112 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 65 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சமன்திகா விஜேசுந்தர தெரிவித்தார்.
அதன்படி, கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகார பிரதேசத்தில் கடந்த 5 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட 164 பிசிஆர் பரிசோதனைகளில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச சூப்பர் வர்த்தக நிலையமொன்றில் இரண்டு தொற்றார்களும் தனியார் சூப்பர் வர்த்தகநிலையமொன்றில் 8 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த சூப்பர் விற்பனை நிலையங்கள் இரண்டும் மூடப்பட்டுள்ள நிலையில் நோயாளர்களுடன் நெருங்கிப் பழகிய சுமார் 300 பேர் தற்போதைய நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நபர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.